அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிறிலங்கா அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக ‘தமிழர் விடுதலைப் பயணம்’ என்ற பெயரில் நடைபெற்ற ஊர்திப் பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவுபெற்றது. அவுஸ்திரேலியா வருகை தந்திருந்த சிறிலங்கா கிரிக்கெற் அணி அவுஸ்திரேலிய அணிணை எதிர்த்துப் பல போட்டிகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு நாடுகளும் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் ‘சிறிலங்காவைப் புறக்கணி’ என்ற மகுட வாக்கியத்தோடு தொடர் போராட்டங்கள் அந்தந்த விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வந்தது. தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective என்ற அமைப்பும் இணைந்து Trevor Grant தலைமையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கும் Trevor Grant தலைமையில் மெல்பேணிலிருந்து நான்கு ஊர்திகளில் பதாகைகள் தாங்கிய வண்ணம் செயற்பாட்டாளர்கள் அடெலெய்ட் நோக்கிப் பயணித்தார்கள். ‘தமிழர் விடுதலைப் பயணம்’ என்ற பெயருடன் நடைபெற்ற இப்பயணம் சனிக்கிழமை காலை மெல்பேணிலிருந்து புறப்பட்டு சுமார் 800 கிலோமீற்றர்கள் பயணித்து அடெலெய்டை அடைந்தது. போகும் வழியில் Ballarat, Horsham, Bordertown ஆகிய நகரங்களில் நின்று கவனயீர்ப்புப் போராட்டங்களைச் செய்ததுடன் மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை வினியோகித்து விளக்கங்களை அளித்துச் சென்றனர். மூன்று நகரங்களிலும் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை இப்போராட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் செறிவாக வாழாத நாடுகளில் கூட இவ்வாறான பல போராட்டங்களை வெள்ளையின மக்களுக்கு அறிவூட்டி சிலர் நடத்திவருவது பாராட்டத்தக்க விடையமாகும். ஆனால் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதில் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் தெரியவில்லை.