நீதித்துறையினரும் வழக்குரைஞர்களும் மிரட்டப்படுவதால் இவ்வருடம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கை எவ்வளவு தூரம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இப்போது தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
சர்வதேச யூரிகள் மன்றம், சர்வதேச சட்டவுரைஞர்கள் சங்கம் என்பன எவ்வாறெனினும் இந்த பிரச்சினையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரஸ்தாபிக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் முதலில் நாடாளுமன்றத்தை விழுங்கியது. இப்பொது நீதித்துறையை விழுங்கிவிட்டது. அடுத்து உள்ளவர்கள் சட்டவுரைஞர்கள். இந்த பிரச்சினை தொடர்ந்தும் விசனத்துக்குரிய விடயமாக மனித உரிமைகள் பேரவையில் இருக்கப்போகின்றது என கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,
‘இந்த நீதித்துறை நெருக்கடி பற்றி ஐ.நா மனித உரமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஏற்கனவே பல அறிக்கைகளை விடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான பலமான கண்டனங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்’ என அவர் கூறினார்.
மனித உரிமைகள் பேரவையின் ஆவர்த்தன பரிசீலனை செயற்குழு அதன் 15ஆவது அமர்வு ஜெனீவாவில் இம்மாதம் 21இலிருந்து பெப்ரவரி முதலாம் திகதிவரை நடைபெறுமென அறிவித்துள்ளது.