அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பணிப்பின் பேரில், மூன்று பேர் கொண்ட அமெரிக்காவின் உயர்மட்டக் குழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் அடுத்து நீக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்கு உயர் மட்டக்குழுவை அனுப்பும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா வரவுள்ள இந்த உயர்மட்டக் குழுவில், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக்கின் கீழ் பணியாற்றும், பிரதி உதவிச்செயலர்கள் மூவர் இடம்பெறவுள்ளனர்.
நல்லாட்சி, ஜனநாயகம், மனிதஉரிமைகள் ஆகிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர்களாக இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தக் குழுவின் வருகையை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தலைமை நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான நகர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது, கடந்த டிசெம்பர் மாத இறுதியில் இவர்களின் பயணம் குறித்து தமக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
“தலைமை நீதியரசர் பதவிநீக்கமே இவர்களின் பயணத்தின் பிரதான நோக்கம் என்று கூறமுடியாவிட்டாலும், அது அவர்களின் கவனத்துக்குரிய முக்கிய விவகாரமாக இருக்கும்.
அவர்கள், நல்லிணக்கம், மனிதஉரிமைகளின் முன்னேற்றம் குறித்த நிலை, ஜனநாயகம் என்பன குறித்து கவனம் செலுத்தவுள்ளனர்.
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கான, பின்புல் நிலைமைகளை ஆய்வு செய்வதே இந்தக் குழுவின் பிரதான நோக்கம்” என்று அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு மற்றும் மனிதஉரிமைகள் நிலை குறித்தும் இந்தக் குழு கடுமையாக கண்காணிக்கவுள்ளது.
“இயல்பாகவே, .சிறிலங்காவில் நாளாந்தம் என்ன நடக்கிறது என்று அமெரிக்கா கவலைப்படுவதில்லை.
அவர்கள், ஜனநாயகம், மனிதஉரிமைகள், நல்லாட்சி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள ‘விக்கல்கள்‘ குறித்தே அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் குழு தமது பயணத்தை அடுத்து சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் அடிப்படையில் தான், எதிர்காலத்தில் சிறிலங்காவை எவ்வாறு அணுகுவது என்று முடிவு செய்யவும் ஒபாமா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்க உயர்மட்டக்குழுவின் சிறிலங்கா பயணம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிறிலங்கா , மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு வரும் 26ம் நாள் தொடக்கம் பெப்ரவரி 1ம் நாள் வரை இந்தக் குழு பயணம் மேற்கொள்ளும்.
இந்தக் குழுவில் பிரதி உதவி இராஜாங்கச்செயலர் ஜேம்ஸ் மூர், பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் விக்ரம்சிங், பிரதி உதவி இராஜாங்கச்செயலர் ஜேன் சிம்மமன் ஆகியோர் இடம்பெறுவர்.
இவர்கள் சிறிலங்காவில் மூத்த அரசாங்க அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகப் பிரதிநிதிகளுடன் பரந்துபட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் மற்றும் தேசிய நடவடிக்கைத் திட்டம் குறித்தும் இவர்கள் கலந்துரையாடுவர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா வரும் குழுவில் இடம்பெறும் ஜேம்ஸ் ஆர் மூர், 2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதுவராகப் பணியாற்றியவர்.
அதன் பின்னர் 2010ம் ஆண்டு தொடக்கம் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவில் பிரதி உதவி இராஜாங்கச் செயலராக பணியாற்றி வருகிறார்.
ஜேன் பி சிம்மமன், தெற்கு, மத்திய ஆசிய விவகாரப் பிரிவில், ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக பிரதி உதவி இராஜாங்கச் செயலராக பணியாற்றி வருகிறார்.
விக்ரம் ஜே சிங், ஆசிய பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவிப் பாதுகாப்புச் செயலர் பணியகத்தில், தெற்கு தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.
முன்னர் இவர், பாதுகாப்புத் திணைக்களத்தில் மூத்த தலைமைப்பீடத்துக்கான, பிராந்திய திட்டங்கள், பாதுகாப்பு மூலோபாய நடைமுறைப்படுத்தல், அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்குமான முதன்மை ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.