சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 26ம் திகதி வடமராட்சி கிழக்கு உடுத்துறை கிராமத்தில் சுனாமியால் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு கார்த்திகை பூக்களை வைத்து அஞ்சலி செய்திய மக்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் கார்த்திகை பூக்களே அதிகமாக கிடைக்கின்றன. இக்காலப்பகுதியில் ஆலயங்களிலும் கார்த்திகைப்பூவே வழிபாட்டிற்காக எடுக்கப்படுகிறது. கடந்த 26ஆம் திகதி உடுத்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்ட போது அங்கு பெரும்பாலான மக்கள் கார்த்திகை பூக்களையே தமது உறவினர்களின் கல்லறைகளில் வைத்து வழிபட்டனர்.
இவ்வேளையில் அங்கு வந்த சிறிலங்கா புலனாய்வு பிரிவினரும் ஈ.பி.டி.பியினரும் கார்த்திகை பூக்களை வைத்து வழிபாடு செய்தவர்கள் மீது விசாரணைகளை நடத்தினர். இளைஞர்கள் சிலரை முகாமுக்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர். எதிர்காலத்தில் ஆலயங்களிலோ அல்லது கல்லறைகளிலோ கார்த்திகை பூவை வைத்து வழிபடக் கூடாது என இராணுவத்தினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.