Sri Lanka

யாழில் குழப்பகரமான சூழ்நிலைக்கு CID, EPDP காரணம்!

“யாழ். குடாநாட்டில் கடந்த நான்கு வாரங்களாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களுக்கு அரச படைகளின் புலனாய்வுப் பிரிவினரும், அரசின் வாலைப்பிடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினருமே காரணம். இரு தரப்பினரும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைக்கேற்பவே செயற்படுகின்றனர்.”

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

யாழில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்; இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்; தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழ வழிசமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கையில் யுத்தம் முடிவடைந்து விட்டது; விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்; மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று மஹிந்த அரசு சர்வதேச சமூகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து சுமார் நான்கு வருடங்கள் நிறைவடையப் போகின்றன. ஆனால், யாழ். குடாநாட்டின் நிலைமையோ கேள்விக் குறியாகவுள்ளது.

இங்கு மஹிந்த அரச படைகளின் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் புலி முத்திரை குத்தப்பட்டு கைதாகி வருகின்றனர். அத்துடன் அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதாகி வருகின்றனர்; கடத்தப்பட்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு யாழ். குடாநாட்டில் இடம்பெறும் அரச படைகளின் அராஜகங்களைப் பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.

இந்தக் குழப்பகரமான அசம்பாவிதங்களுக்கு அரச படைகளின் புலனாய்வுப் பிரிவினரும், அரசின் வாலைப்பிடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினருமே காரணம் என்பதை நான் அடித்துக்கூற விரும்புகின்றேன். இரு தரப்பினரும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைக்கேற்பவே செயற்படுகின்றனர்.

இவர்கள் யாழ். குடாநாட்டில் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றனர். ஏனெனில், யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரச படைகள் யாழில் நிலைத்திருக்க வேண்டும் என்பது பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினது விருப்பமாகும். இதனால்தான் புலி முத்திரை குத்தி விசேட புனர்வாழ்வு என்ற பெயரில் எமது தமிழ்ப் பிள்ளைகளைக் கைதுசெய்கின்றனர்; கடத்துகின்றனர்.

எனவே, யாழ்.குடாநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்; இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்; தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழ வழிசமைக்க வேண்டும்” – என்றார்.

Most Popular News