Sri Lanka

யாழில் வானில் கைத்துப்பாக்கிகளுடன் இராணுவப் புலனாய்வாளர்கள்! – அச்சத்தில் மக்கள்

யாழ். மாவட்டத்தில் வடமராட்சி, தென்மராட்சி ஆகிய பிரதேசங்களில் கறுத்த நிற வானில் இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றித் திரிகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிராமப் புறங்களில் கறுத்த நிற வானில் முகங்களைத் துணியினால் மூடிக்கட்டியவாறு கைத்துப்பாகிகளுடன் வந்திறங்கும் இராணுவப் புலனாய்வாளர்கள் அங்குள்ள மக்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொள்கின்றனர் எனத் தெரியவருகின்றது.

இதனால் இளைஞர்கள், யுவதிகள் வெளியே தனித்துச் செல்ல அச்சமடைகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த மாதம் வல்வெட்டித்துறைப் பகுதியில் புனர்வாழ்வுபெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் இருவர் (இருவரும் உறவினர்கள்) கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வடமராட்சி பிரதேசத்தில் கடந்த மாதம் நடுப்பகுதியில் மட்டும் முன்னாள் போராளிகள் 28 பேர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 22 ஆம் திகதி சனிக்கிழமை வரையான 7 நாட்களில் மேற்படி போராளிகள் கைதாகி வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதாகியவர்கள் அனைவரும் இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு அரசின் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Most Popular News